சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, சோதனைகள் நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளது.

    இந்நிலையில், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான விவரங்களுடன், ஆதார் அட்டை விவரங்களுடனும் ஆஜராகும்படி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்த சம்மன்களை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது.

    அப்போது, தமிழக அரசுத்தரப்பில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியாது. பா.ஜ. ஆளும் மாநிலங்களில் உள்ள வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம். சம்மன் அனுப்ப முடியாது. மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும் வகையில் அனுப்பப்பட்டுள்ள சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    அமலாக்கத் துறை தரப்பில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கனிம வள சட்டம் மட்டுமல்லாமல், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், விசாரணை நடத்த அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது.

    இந்த வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகளை சமர்ப்பிக்க கேட்டும், அவை வழங்கப்படவில்லை. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை தொடர்பான வழக்கு, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிகளவு மணல் எடுத்தது தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் விசாரணை துவங்கியுள்ளது. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. இந்த விசாரணையை மாநில அரசு தடுக்க முடியாது என வாதிடப்பட்டது.

    இன்று இந்த வழக்கில் இடைக்கால
    உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, அமலாக்க துறை அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பிய இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை என தெரிவித்தது.

    குற்றம் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அமலாக்க துறை விசாரிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், அமலாக்கத் துறை வாதத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், குற்றம் மூலம் ஈட்டப்பட்ட தொகையை கண்டறியும் முயற்சியாக அமலாக்கத் துறை, மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு அமலாக்க துறைக்கு அதிகாரமில்லை எனவும் கூறி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    அதேசமயம் விசாரணை நடத்த தடை விதிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு மூன்று வார அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை டிசம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...