சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர், பொம்மாதேவி கோவில் மாசி பவுர்ணமி திருவிழாவின்போது, அரசு வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்திற்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர், பொம்மாதேவி கோவில் மாசி பவுர்ணமி திருவிழாவின்போது, அரசு வகுத்துள்ள விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்துக்குள் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர் பொம்மாதேவி கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி பவுர்ணமி திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குவிவதால், புலிகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பதாக கூறி, கோவையைச் சேர்ந்த கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், திருவிழாவின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் வருவதால் புலிகள் சரணாலயத்தில் காற்று மாசும், ஒலி மாசும் ஏற்படுகிறது, விழாவில் பலியிடும் விலங்குகளின் கழிவுகளை விட்டுவிட்டு செல்வதாலும், பட்டாசுகளை வெடிப்பதாலும், விறகுகளை பயன்படுத்தி சமைப்பதாலும் சரணாலயத்தில் மாசு ஏற்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டது.

திருவிழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என நிர்ணயிக்கும்படியும், அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக பக்தர்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசுத்தரப்பில், கோவிலுக்கு தனியார் வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படுவதில்லை. 100 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். விலங்குகளுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக், மதுபானங்கள் கொண்டு வரக்கூடாது, பட்டாசுகள் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

கோவில் நிர்வாகம் தரப்பில், விழாவுக்குப் பின் அந்த பகுதி முழுமையாக சுத்தப்படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த ஆண்டு நடைபெற உள்ள திருவிழாவின் போது அரசு விதிகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...