சம்மன் to எடப்பாடி

அதிமுக முன்னாள் எம்.பி.-யான கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கே.சி.பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்த ஜார்ஜ் டவுன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதி T.திருமாள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

You may also like...