செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ

அமலாக்கத் துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை, அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால், கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

கைதானபோது தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செப்டம்பர் 20ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 7வது முறையாக நீட்டித்த அமர்வு நீதிமன்றம், அக்டோபர் 13ம் தேதி வரை சிறையிலேயே அடைக்க உத்தரவிட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், உடல் நலக்குறைவால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததில் இருந்து முழுமையாக குணமடையாத நிலையில் மீண்டும் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறைக்கு சென்ற நிலையில், சிறையில் இருந்தவாறே சிகிச்சை பெறுவதில் சிரமம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை நாளை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்

You may also like...