சென்னை நகரில் சூரப்பட்டு, போரூர் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24 ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிப்பது எனவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் கோயம்பேட்டில் தான் கேரேஜ்கள் உள்ளன என்பதால், கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக்குள் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்கும் இடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்கும் முன்பே பேருந்து நிரம்பி விடும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கம் வீணாகி விடும் எனை குறிப்பிட்ட நீதிபதி, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் கண்டு வரைபடம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...