துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை நீதிபதி என்.சேஷசாயி, ரத்து செய்து உத்தரவிட்டார்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி துக்ளக் பத்திரிகையின் 51வது ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகளால் நியமிக்கபட்டவர்கள் என்பது உள்ளிட்ட கருத்துகளை பேசினார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்துவிட்டார்.

ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, முந்தைய உத்தரவை ரத்து செய்து, அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென, தற்போதய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து முந்தைய உத்தரவை திரும்பப்பெற்ற தற்போதைய தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மீண்டும் விசாரணை நடைமுறையை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை திரும்பப் பெற்றதை எதிர்த்து குருமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

You may also like...