நான்காயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகள் மூன்று பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 18 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் உள்ளிட்ட 13  பேர் தலைமறைவாக உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகளான கோவிந்தராஜ்,  சுஜாதா மற்றும் துரைராஜ் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்

இந்த மனுக்கள் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் யாரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக இல்லை எனவும், இந்த முறைகேடுக்கும் மனுதாரர்களுக்கும் தொடர்பில்லை என்றும் கூறினார்.

காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருப்பதால் ரெட் நோட்டீஸ் அளித்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மனுதாரர்கள் மூவரும் சேர்ந்து பல கோடி ரூபாயை பொதுமக்களிடம் இருந்து வசூலித்துள்ளதாகவும் விசாரணை தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க கூடாது என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் D.செல்வம், பலர் ஏமாற்றப்பட்டுள்ளதால் மூவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து, மூவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி இது போன்ற நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென்றும் தெரிவித்தார்.

You may also like...