நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கல்வி நிறுவனங்களில் கல்வி சாராத கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தக் கூடாது எனவும், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், திருச்சி மற்றும் வேலூரில் உள்ள தனியார் பள்ளிகளில் கண்காட்சி நடத்தப்பட்டதாகக் கூறி, திருப்பூரைச் சேர்ந்த பரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், இந்த கண்காட்சிகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவையும், அரசு உத்தரவையும் பின்பற்றவில்லை எனவும், இதுசம்பந்தமாக அளித்த மனுவை அரசு பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவன வளாகங்களில் வணிக ரீதியிலான கண்காட்சிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு நான்கு வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...