நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக். அதிரடி உத்தரவு. சிதம்பரம் கோயில் விவகாரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்தக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோவிந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளது. ஆழ்வார்களால் பாடப்பெற்ற இந்த கோவிலை நிர்வகிக்க தனி நிர்வாக குழு உள்ளது.

பொது தீட்சிதர்களின் பாரபட்ச போக்கு காரணமாக கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 50 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படவில்லைஎனக் கூறி, சிதம்பரத்தைச் சேர்ந்த எம்.என்.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், நடராஜர் கோவிலில் சைவ மற்றும் வைணவ பிரிவுகளுக்கிடையே ஒரு சுமூகமான சூழல் இல்லாதால் பிரம்மோற்சவ விழா நடத்த முடியவில்லை எனவும், அதற்கு காரணம் பொது தீட்சிதர்கள் தான் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கனகராஜ், கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு பிரம்மோற்சவம் நடத்தக் கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கு குறித்து அறநிலையத் துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் பொது தீட்சிதர்கள் குழு ஆகியோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

You may also like...