நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் வேதனை ops case

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து சிவகங்கை நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைசாரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவிவகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி 2012ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு நீதிமன்றங்கள் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, எதிர்க்கட்சியினருக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை, எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி ஆகும்போது மேல்விசாரணை நடத்த அனுமதி கேட்டு அதன் பிறகு இறுதி அறிக்கை தாக்கல் செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க வகை செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

பன்னீர் செல்வத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் 374 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டி உள்ளதாகவும், 272 சாட்சிகள், 235 ஆவணங்களை சேகரித்து 3 ஆண்டுகள் நடத்திய விசாரணையின் இறுதியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் சார்ந்த கட்சி மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே மேல்விசாரணை கோரி மனு தாக்கல் செய்து அதை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது என்று நீதிபதி சுட்டி காட்டினார்.

அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியதன் மூலம் உயர் நீதிமன்றமும் தவறிழைத்திருக்கிறது என குறிப்பிட்ட நீதிபதி, மேல்விசாரணைக்கு பிறகு இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு பதிலாக, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இறுதியாக சபாநாயகர் இந்த வழக்கில் ஒரு நீதிபதி போல செயல்பட்டு பன்னீர்செல்வத்திற்கு எதிராக வழக்கு தொடர அளித்த அனுமதியை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறார் இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவித்த நீதிபதி, குற்ற விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகவும், சட்டங்கள் எம்பி எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது என்று அறிவித்து விடலாம் என வேதனை தெரிவித்தார்.

எம்பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணை நடைமுறையில் பிரச்சனை உள்ளதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமான முறையில் செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயத்தை சிதைத்து விடும் எனவும், லஞ்ச ஒழிப்பு துறை உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் அழிந்து விடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, 2012 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை தற்போது மறு ஆய்வு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்தது மற்றும் விடுவித்த தீர்ப்புகளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...