நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிமன்றங்கள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை பதிவு செய்வதற்கு, பதிவுச் சட்டத்தில் உள்ள காலவரம்பு தடையாக இருக்காது என உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த போதும், சார் பதிவாளர்கள் அதே நிலைபாட்டை பின்பற்றுவதாக அதிருப்தி தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய, பதிவுச் சட்டத்தில் கூறியுள்ள காலவரம்பு தடையாக இல்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகாவில் உள்ள கீழ்புதுப்பட்டு கிராமத்தில் உள்ள 2.50 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், திண்டிவனம் மாவட்ட முன்சீஃப் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் பிறப்பித்த தீர்ப்பை பதிவு செய்யக் கோரி, மரக்காணம் சார் பதிவாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நீதிமன்றம் தீர்ப்பளித்த நான்கு மாதங்களில் பதிவு செய்ய வேண்டும் என பதிவுச் சட்டம் கூறியுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு நகல் பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பின் பதிவு செய்ய கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி, பதிவு செய்ய மறுத்து மரக்காணம் சார் பதிவாளர் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தீர்ப்பை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நீதிமன்றங்கள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை பதிவு செய்வதற்கு, பதிவுச் சட்டத்தில் உள்ள காலவரம்பு தடையாக இருக்காது என உயர் நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவு பிறப்பித்த போதும், சார் பதிவாளர்கள் அதே நிலைபாட்டை பின்பற்றுவதாக அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், நீதிமன்ற தீர்ப்புகளை பதிவு செய்ய, பதிவுச் சட்டத்தில் கூறியுள்ள காலவரம்பு தடையாக இல்லை என்ற உயர் நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என, அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு மதிப்பு அடிப்படையில் பதிவுக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, சொத்து மதிப்பில் பதிவுக்கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறும் பதிவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்த நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என, மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.

You may also like...