நீதிபதி இளந்திரையன், காணாமல் போன டிக்கெட்களுக்கான தொகையை நடத்துனர்களிடம் வசூலிக்கக் கூடாது

டிக்கெட் பண்டல் மாயமான விவகாரத்தில் நடத்துனரின் சம்பளத்திலிருந்து 36 ஆயிரம் ரூபாயை பிடித்தம் செய்த அரசு போக்குவரத்து கழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கோவை மண்டலத்தில் நடத்துனராக பணியாற்றும் ஏ.பிரபாகரன், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேரக்காப்பாளரிடம் டிக்கெட் பண்டலை வாங்கிவந்து, ஓட்டுனர் இருக்கையின் இடது புறத்தில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பண்டல் மாயமான நிலையில் உடனடியாக போக்குவரத்து கழக நிர்வாகத்தில் புகார் செய்தார்.

ஆனால், டிக்கெட் பண்டலின் தொகையான 36 ஆயிரத்து 103 ரூபாயை சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய 2010ஆம் ஆண்டு நவம்பரில் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு, ஒவ்வொரு மாதமும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் பிடித்தம் செய்தது.

இதை எதிர்த்து பிரபாகரன் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஓய்.ஜார்ஜ் வில்லியம் ஆஜராகி, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களின் பொருட்களை வைப்பதற்கு எந்த லாக்கர் வசதியும் பேருந்துகளில் செய்து தரப்படவில்லை என்றும், தொலைந்துபோகும் டிக்கெட்டுகளுக்கு நடத்துனரிடமிருந்து சம்பள பிடித்தம் செய்ய கூடாது என்கிற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து கழகத்தின் முடிவில் தவறில்லை என்றும், சம்பளத்தில் பிடித்தம் செய்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி இளந்திரையன், காணாமல் போன டிக்கெட்களுக்கான தொகையை நடத்துனர்களிடம் வசூலிக்கக் கூடாது இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, நடத்தினர் பிரபாகரன் மீதான நடவடிக்கை தொடர்பான உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பிடித்தம் செய்த தொகையை திரும்ப தருவது குறித்து 4 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...