நீதிமன்ற விடுமுறைகள் குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

நீதிமன்ற விடுமுறைகள் குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய நீதித்துறையில், கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, தசரா விடுமுறை என தொடர் விடுமுறைகள் உள்ளதாகவும், இது அபத்தமானது எனவும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்துக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுசம்பந்தமாக, பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகளாக உள்ளவர்கள், நீண்ட நேரம் பணியாற்றுகின்றனர்; நிர்வாக பணிகளை மேற்கொள்கின்றனர்; நீதிமன்ற நேரத்துக்குப் பிறகும் நீதிமன்றங்களில் இருந்து பணியாற்றுகின்றனர் என்பது நீதிமன்ற நடைமுறைகளைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், வார இறுதி நாட்கள், விடுமுறை காலங்களில் தீர்ப்புகள் எழுதுவதிலும், திருத்தங்கள் செய்வதிலும் மட்டும் தான் நீதிபதிகள் செலவிடுகின்றனர் என்பது நிறைய பேருக்கு தெரியாது. 37 ஆண்டுகளுக்கு முன், 127 வது சட்ட ஆணையம் பரிந்துரைத்தும், நீதித்துறை செலவினங்கள் இன்னும் திட்டமிடப்படாத செலவினங்களில் உள்ளது என்பது சஞ்சீவ் சன்யாலுக்கு தெரியும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என 1987 ம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரைத்திருந்தது. கடந்த ஜனவரி மாதம் லோக்சபாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் வெளியிட்ட அறிக்கையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ளது எனக் கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், இரண்டு மடங்குக்கு அதிகமாக வழக்குகளை தற்போதைய நீதிபதிகள் கையாள்கின்றனர். நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வரும் நீதிபதிகளைப் பற்றியும், நீதித்துறை பற்றியும் பேச அதிகார அமைப்புக்கு எந்தவிதமான தார்மீக உரிமையோ, சட்ட உரிமையோ இல்லை என கண்டித்துள்ளது.

5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சஞ்சீவ் சன்யால் கூறும் நிலையில், அதில் 73 சதவீத வழக்குகள் அரசு தாக்கல் செய்தது எனவும், பொறுப்பற்ற முறையில் நீதித்துறையை விமர்சித்துள்ள சஞ்சிவ் சன்யாலின் கருத்துக்கள் கடும் கண்டனத்துக்குரியது என பார் கவுன்சில் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You may also like...