புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் புகார்தாரருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புகார் அளித்தவர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் புகார்தாரருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி மகேஸ்வரி, தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருக்கும் ஆட்டோ டிரைவர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக கொடுங்கையூர் போலீசில் 2017ஆம் ஆண்டு டிசம்பரில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மகேஸ்வரியின் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில், தனக்கு எதிராக அதே பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவரிடம் புகார் பெற்றும் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, கொடுங்கையூர் ஆய்வாளர் புகழேந்தி, உதவி ஆய்வாளர் வர்கீஸ் இக்னேஷ்யஸ் ராஜா மற்றும், உதவி ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக பார்த்தசாரதி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், மூன்று காவல் துறை அதிகாரிகளும் உள்நோக்கத்துடன் பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு 3 லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த இழப்பீட்டு தொகையை மூன்று காவல் துறை அதிகாரிகளிடம் இருந்தும் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்ட ஆணையம், மூவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்தது.

You may also like...