மனுதாரர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ஆலைக்கான அனுமதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் புதுப்பிப்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கப்பட்டதாகவும், நான்கு மாதங்களாக அதனை கிடப்பில் போட்ட பின்னர் எந்த வித காரணமும் சொல்லாமல் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பீர் தொழிற்சாலையை மூடும்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுனைடெட் பிரிவரிஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் மற்றும் அரண்வாயல் பகுதிகளில் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அங்கு கடந்த 24ம் தேதி ஆய்வு நடத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பல்வேறு விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி ஆலையை மூட உத்தரவிட்டது.

மேலும், ஆலைக்கான மின் இணைப்பை துண்டிக்கவும் மின் வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து யுனைடெட் பிரிவரிஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ஆலைக்கான அனுமதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் புதுப்பிப்பதற்காக ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கப்பட்டதாகவும், நான்கு மாதங்களாக அதனை கிடப்பில் போட்ட பின்னர் எந்த வித காரணமும் சொல்லாமல் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறினார்.

கடந்த 20ம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு 24ம் தேதி ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறினார். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆலையில் உள்ள அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை சரி செய்ய தயாராக இருப்பதாகவும் மனுதாரர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உறுதியளித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ஆலையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதையும், ஆலை நீண்டநாள் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென மூட உத்தரவிட்டால் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆலையை மூடும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு முன்று வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டனர்

You may also like...