முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும்

முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பியதாக உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். பின்னர் முருகன் எம்பி ஆனதால் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது .

இந்த நிலையில் நீதிபதி அலிசியா முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது .
அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கு குறித்த ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதி அடுத்த விசாரணைக்கு எல.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அன்றைய தினம் அவதூறு வழக்கு குறித்த நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

You may also like...