3 years imprisonment cbi court order
சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், இந்திய உணவு கழக முன்னாள் துணை பொது மேலாளர் மற்றும் அவரது மனைவிக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழகத்தில் துணை பொது மேலாளராக பணியாற்றிய துரைராஜ், வருமானத்துக்கு அதிகமாக 54 லட்சத்து 98 ஆயிரத்து 969 ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் குவித்துள்ளதாக கடந்த 2009ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழும் துரைராஜ், அவரது மனைவி சாருமதி ஆகியோர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா, குற்றம் சாட்டப்பட்டுள்ள துரைராஜ், அவரது மனைவி சாருமதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், சட்டவிரோத பெற்ற பணத்தின் மூலம் சேர்த்த சொத்துகளை அரசுடமையாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.