உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை  எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 22ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை  எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 22ம் தேதி தீர்ப்பளிக்க உள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில், கடந்த 2017 ம் ஆண்டு  சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.

இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன்  அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் ஜூலை 22ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில், தீர்ப்புக்காக முதல் வழக்காக இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

You may also like...