ag அதிரடி வாதம் கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை 2 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க டெண்டர். cj order

கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை 2 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், 2024 டிசம்பரில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் எனவும் தமிழக்அ அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, ஆட்சியர் அலுவலகம் அமைக்க வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கோவில் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு விடக்கூடாது எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2020ஆம் ஆண்டு ஜூலை முதல், மாதம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை வாடகையாக கணக்கிட்டு ஒரு மாதத்தில் கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரியும், வாடகை பாக்கியை கோவில் நிர்வாகத்துக்கு வழங்கக் கோரியும், கோவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும் கோவில் அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் தெய்வீகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, குத்தகை பாக்கி 74 லட்சத்து 16 ஆயிரம் ரூபாயை கோவில் நிர்வாகத்திடம் டிபாசிட் செய்யப்பட்டு விட்டதாக அரசித்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவில் சீரமைப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கோவிலை சீரமைக்க 2 கோடியே 82 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இப்பணிகளை மேற்கொள்வதற்காக மின்னணு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் 2024ம் ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைக்கு நிவாரணம் கிடைத்துள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

மனுதாரர் தரப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் துவங்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுமான பணிகள் துவங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

You may also like...