Cost 25 k தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத்

அழிந்து வரும் கழுகுகளை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கழுகுகள் பாதுகாப்பு மையம் அமைக்கக் கோரிய வழக்கில் ஜூன் 5ம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கழுகுகள் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு NIMUSLIDE, FLUNIXIN மற்றும் CARPROFEN ஆகிய மருந்துகளை சட்டவிரோதமாக விலங்குகளுக்கு செலுத்துவதாகவும், மருந்து செலுத்தப்பட்ட விலங்குகள் இறந்தபிறகு, அவற்றின் மாமிசத்தை சாப்பிடும் கழுகுகள் அதிகளவில் உயிரிழப்பதால், நான்கு மாவட்டங்களிலும் மூன்று மருந்துகளையும் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க வேண்டுமென கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞரும், வன விலங்குகள் ஆர்வலருமான  சூர்யகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், 1980ம் ஆண்டில் இந்தியாவில் நான்கு கோடி கழுகுகள் இருந்த நிலையில் தற்போது 19,000 கழுகுகள் மட்டுமே இருப்பதாகவும், இயற்கையின் சுகாதார பணியாளர்களான கழுகுகளை பாதுகாக்க, நான்கு மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் இன்று மீணும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவுக்கு பதிலளிக்க மத்யிய – மாநில அரசுகள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்று, ஜூன் 5ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால், மத்திய – மாநில அரசுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

You may also like...