Dgp rajesh doss case v parthiban j order

வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ளதால், சஸ்பெண்ட் காலத்திற்கான படித் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமென சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி,  கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய  விசாகா குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவில், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களை கூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்

தற்போதைய விசாகா கமிட்டியை கலைத்துவிட்டு,
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி இயற்கை நீதியை பின்பற்றி மீண்டும் முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ராஜேஸ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
விசாக கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஒரு அதிகாரி எந்தவித விசாரணையுமின்றி தன்னை தூக்கில் போட வேண்டும் என பேசி உள்ளதாகவும், கமிட்டி நியாயமான முறையில் விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்

அதேபோல வாழ்வாதாரத்திற்கு ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து இதுவரை தனக்கு படித் தொகை வழங்கப்படவில்லை என்பதால் அதனை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்

இதற்கு தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாகா கமிட்டியின் அறிக்கையை சீலிட்ட கவரில்
தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

You may also like...