Judge anitha sumanth பழனி தண்டாயுத பாணி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுத பாணி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 220 ஏக்கர் சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுத பாணி கோவிலுக்கு, கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த பலர் 220 ஏக்கர் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை கண்டறிந்து மீட்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 2017 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், தானமாக வழங்கப்பட்ட இந்த சொத்துக்கள் எங்கிருக்கின்றன என்பதை கண்டறிய முடியவில்லை என்பதால் அவற்றை அடையாளம் கண்டு மீட்கக் கோரி அளித்த மனுவின் அடிப்படையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறியுள்ளார்.

அதன்பின் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் பழனி தண்டாயுத பாணி கோவிலுக்கு சொந்தமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்பது தொடர்பாக, அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சொத்துக்களை அடையாளம் கண்டு, மீட்பது தொடர்பான கூட்டத்தை, பிப்ரவரி 1 ம் தேதியில் இருந்து 9 ம் தேதிக்குள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை குறித்து பிப்ரவரி 14 ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 15 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...