Judge m sunder சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த, மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும் அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும் அந்த படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்கள் பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என சிவகார்த்திகேயன் கூறியதாகவும்,
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாரிப்பாளர் ஞானவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்களுக்கு பணத்தை வழங்குமாறு தம்மிடம் சிவகார்த்திகேயன் கூறி விட்டு தற்போது இந்த வழக்கை தெடர்ந்துள்ளதாகவும், டி.டிஎஸ் தொடர்பாக சிவ கார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வில் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் எனவும் டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும் போது மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என நடிகர் சிவ கார்த்திகேயன் தரப்பிற்கு கேள்வி எழுப்பினர்.

பின்னர் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணை வரும் 13ம் தேதி நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்தார்.

You may also like...