Judges mahadevan j judge Athikesavalu இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடர்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான பணியில் கோவில்களின் செயல் அலுவலர்கள், பொதுப்பணித் துறையினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இரு துறை அதிகாரிகளும், கோவில்கள் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை படி செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களுக்கான நிதி, ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 2 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், கோவில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 5,82,039 ஏக்கர் நிலங்களில் 3,79,000 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள நிலம் கண்டறியப்பட்டு வருவதாகவும், நாளொன்றுக்கு 2000 ஏக்கர் வீதம் மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோவில்களில் ஸ்ட்ராங் ரூம்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலில் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டதாகவும் அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்தார். எனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், சிலவற்றை மறு ஆய்வு செய்யக்கோரும் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

பின்னர் நீதிபதிகள், கோவில் புனரமைப்பு குழுக்கள் எடுக்கும் முடிவுகளை மற்ற துறைகள் ஏற்க வேண்டும் என்றும், அறநிலையத்துறை பணிகளில் குழுக்கள் தலையிடாது என்றும் தெரிவித்தனர். புனரமைப்பு பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது செயல் அலுவலர்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தினர். கணக்கு தணிக்கைக்கு ஒரே ஒருவர் தலைமையில் மற்ற 5 அலுவலர்கள் கொண்ட குழு போதாது என்றும், குறைந்தபட்சம் குறைந்தபட்சம் 15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென அரசிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

அறநிலையத்துறை கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் இதுபோன்ற புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோவில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும், தர மறுத்தால் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டினர். அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் வருவதாகவும், அவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

குறிப்பாக அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணை மூன்று வாரங்ளுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

You may also like...