Navj opinion நீக்குங்க

அமைச்சர் பொன்முடிக்கு எரிரான வழக்கில் தனக்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த தேவையற்ற, களங்கப்படுத்தும் கருத்துக்களை நீக்க வேண்டும் என வேலூர் மாவட்ட நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு பதிலளித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வு மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்து, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஜூன் 6ம் தேதியிலிருந்து நகர துவங்கியுள்ளதாகவும், ஜூன் முதல் வாரத்தில் இருந்தே குற்றம் சாட்டப்பட்டவர்களின் நட்சத்திர பலன்கள் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நகர தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஜூன் 23ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களில் ஜூன் 28ம் தேதி 172 சாட்சிகள் 381 ஆவணங்களுடன் 226 பக்க விடுதலை தீர்ப்பை வேலூர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக வேலூர் மாவட்ட நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு விளக்கமளித்துள்ளார்.

அதில், விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து 2022 ஜூலை 12ம் தேதி வேலூருக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 15ம் தேதி வழக்கு ஆவணங்கள் பெறப்பட்டு அக்டோபர் 19ம் தேதி மறு எண் வழங்கப்பட்டு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை விரைந்து முடிக்க ஏதுவாக வாரம் ஒருமுறை என்ற அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது எனக் கூறியுள்ளார்.

மொத்தம் 40 நாட்கள் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இது தொடர்பான உத்தரவுகளை பார்க்காமல் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என ஓய்வு பெற்ற நீதிபதி கூறியிருக்கிறார்.

2021 ஏப்ரலில் செங்கல்பட்டில் இருந்து வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், சென்னைக்கு இடமாற்றம் கேட்டு இருமுறை விடுத்த கோரிக்கையையும் உயர் நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜூன் முதல் வாரத்தில் இருந்தே குற்றம் சாட்டப்பட்டவர்களின் நட்சத்திர பலன்கள் மாவட்ட நீதிபதி உள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகளின் ஆசியுடன் நேர்த்தியாக நகர தொடங்கியுள்ளது என்று கூறியது தேவையற்றது. தன்னை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்து இது என்றும் கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாதக பலன்கள் தனது தீர்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியது இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் முதல் நடுவர் நீதிமன்றம் வரை எந்த நீதிமன்றமும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாதகத்தை நம்புவதில்லை என முழுமையாக நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கு வேலூருக்கு மாற்றும் முன் விழுப்புரம் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது. யாருக்கும் சாதகமாகவோ அல்லது அச்சத்தின் அடிப்படையிலோ இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பளித்ததாகவும் விழுப்புரம் நீதிமன்றத்தில் 90% விசாரணை முடிந்த நிலையில் மீதி விசாரணையை மட்டுமே தாம் மேற்கொண்டதாகவும் வழக்கில் வாதங்கள் முடிந்து பத்து நாட்களுக்கு பிறகு தான் தீர்ப்பளிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், எழுத்துப்பூர்வமான வாதங்கள் என 150 பக்கங்கள் தவிர்த்து 75 பக்கங்கள் மட்டுமே தீர்ப்பாக தம்மால் எழுதப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

தனது தரப்பு விளக்கத்தை கேட்காமலேயே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்துள்ளதாகவும், ஒரே உத்தரவில், 28 ஆண்டுகள் கட்டிக்காத்த பணி நேர்மையை பறித்து விட்டதாக கூறியுள்ளார்.

என்ன தவறு செய்தேன் என எந்த காரணமும் தெரிவிக்காமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

You may also like...