NLC case நீதிபதி டீக்காராமன், வேதனை

என்எல்சி சுரங்க தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் வகையில் சுற்றறிக்கை பிறப்பித்த என்எல்சி மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி, 5-வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், சிலர் காயமடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

முன் ஜாமின் வழங்க கூடாது என்று உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்திய நிலையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.எல்.சி. மனித வள மேம்பாட்டு துறை அதிகாரி பிறப்பித்த சுற்றறிக்கை உளவியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்துவதால், மனுவாக தாக்கல் செய்ய இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி RMT. டீக்கராமன், தீ விபத்து குறித்த விசாரணை குறித்த அறிக்கையை செப்டம்பர் 25ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் மனுதார்களில் பணியில் இருப்பதாலும், சில ஓய்வுபெற்றுவிட்டதாலும் அறிக்கை தாக்கல் செய்யும் வரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனுதாரர்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி ஆகஸ்ட் 17ஆம் தேதி நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், அன்று மாலையே என்எல்சி மனித வளம் மேம்பாட்டு துறையின் உதவி பொது மேலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையை நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். அதில் நிறுவனத்திற்குள் நடைபெறும் விவகாரங்களை வழக்கறிஞர்களிடம் பகிரக்கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, இது பணிநீக்கம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தை தொழிலாளர் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உகந்த வழக்கு என்று கூறியுள்ள நீதிபதி டீக்காராமன், இந்த விவகாரத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இந்த சுற்றறிக்கை பிறப்பித்த மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியின் பெயர் உள்ளிட்ட தகவலை மூன்று நாட்களில் தாக்கல் செய்ய வேண்டுமென என்எல்சி நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...