கிளப் judge எஸ்.எம். சுப்ரமணியம் கிடுக்கிபிடி உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் தனியார் கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மீட்டு, பொதுமக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள மவுண்ட் ப்ளசண்ட் சோசியல் கிளப்பிற்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை கடந்த 1937ம் ஆண்டு குத்தகைக்கு அரசு அளித்தது.

வருவாய்த் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் விதிகளை மீறியதாக கூறி அந்த குத்தகையை கடந்த 2003ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை நில நிர்வாக ஆணையரும் உறுதி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, க்ளப்பை சீல் வைக்க கடந்த 2015ம் ஆண்டு குன்னூர் தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை எதிர்த்து க்ளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், குத்தகை வாடகையாக ஆண்டிற்கு 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டதாகவும் அந்த தொகையையும் பல ஆண்டுகளாக க்ளப் நிர்வாகம் செலுத்ததாத நிலையில் 66 ஆண்டுகளுக்கான மொத்த குத்தகை தொகையாக 660 ரூபாயை காசோலையாக வழங்கியதாக கூறினார்.

அதே வேளையில் குத்தகை நிலத்தை தனியார் பள்ளிக்கு உள் வாடகைக்கு விட்டதன் மூலம் 1972ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை கிளப் வசூலித்ததாக தெரிவித்தார். விதிகளை மீறியதாலேயே குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த க்ளப் தரப்பு, விளையாட்டு நிகழ்வுகளுக்காக குத்தகை நிலத்தின் ஒரு பகுதியை தனியார் பள்ளி பயன்படுத்தி கொள்ள அனுமதித்தாகவும் அதற்கான பராமரிப்பு கட்டணமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குன்னூரில் அதிக சந்தை விலை மதிப்புடைய நிலத்தை குறைந்த வாடகையில் க்ளப் நிர்வாகம் அனுபவிப்பதை அனுமதிக்க முடியாது என கூறி, அந்த நிலத்தை உடனடியாக மீட்க உத்தரவிட்டார்.

மீட்கப்படும் அந்த நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதி, தாசில்தாரின் நடவடிக்கையை எதிர்த்து கிள்ப் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...