Rskj பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடி எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என திட்டத்தின் சிறப்பு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 3ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை- பெங்களூரு தேசியக் நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடி எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என திட்டத்தின் சிறப்பு தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய ஜனவரி 3ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு, கடந்த முறை முறை விசாரணைக்கு வந்த போது, இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 190 கோடி ரூபாய் இழப்பீடு எவ்வாறு உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், அந்த திட்டத்தின் சிறப்பு தாசில்தாரும், தற்போதைய மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையருமான நர்மதா நேரில் ஆஜராகியிருந்தார்.

அவர் தரப்பில், இழப்பீடு வழங்கியது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

அதை ஏற்று, ஜனவரி 3ம் தேதி வரை அவகாசம் வழங்கி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்த நீதிபதி, அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதாவை அன்று ஆஜராகவும் உத்தரவிட்டார்.

You may also like...