Temple land. Case smsj order நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம். கோயில் நிலம் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் கோவில் நிலத்தை அபகரித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபணமானால், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவைக்கப் போவதில்லை என அம்மாநில அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை  போலி பத்திரம் தயாரித்து, தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமான விற்பனை பத்திரத்தை ரத்து செய்யக் கோரி கோவில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நில அபகரிப்பில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் விவிலியன் ரிச்சர்டு ஜான்குமார் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம் சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி புதுச்சேரி சிபிசிஐடி காவல்துறையினர் மூடி முத்திரையிட்ட உறையில் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இரு எம்.எல்.ஏக்கள் தரப்பிலும், தாங்கள் அப்பாவிகள் என்றும், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், குறிப்பிட்ட அந்த சொத்து கோவிலுக்கு சொந்தமானது என்று நிரூபித்தால் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைகக் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கோவில் நிலத்தை அபகரித்த வழக்கில் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப் போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, கோவில் சொத்து தனியாருக்கு விற்கப்பட்டதில் அரசு ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டபட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, புதுச்சேரி அரசுத்தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, விசாரணையை தொடர உத்தரவிட்டார்.

மேலும், மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, பொது சொத்தான கோவில் சொத்தை, பாதுகாக்க வேண்டியது எம்.எல்.ஏக்களின் கடமையும் கூட என்பதால் உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை 6வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

You may also like...