Tender case EB ch adj

சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்களுக்கான 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கை பிப்ரவரி மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சென்னை எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தை விரிவாக்கும் செய்யும் திட்டத்தில், 660 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட கூடுதல் அலகை அமைப்பதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டான்ஜெட்கோ கடந்த 2019ஆம் ஆண்டில் டெண்டர் கோரியது. அதில் வெற்றிபெற்ற லான்கோ (LANCO) பணிகளை முடிக்காமல் கைவிட்ட நிலையில், அந்த டெண்டர் பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டது.

மொத்த தொகையில் 10 சதவீதத்தை வங்கி உத்தரவாதமாக 30 நாட்களில் செலுத்த வேண்டிய தொகையை 16 மாதங்களாக செலுத்தாததால் டெண்டர் ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்து 2021 ஏப்ரல் 23ஆம் தேதி டான்ஜெட்கோ உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பிஜிஆர் எனர்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மீண்டும் டெண்டர் கோரக்கூடாது எனவும், தற்போதுள்ள நிலை நீடிக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கே வழங்கி டான்ஜெட்கோ 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதில் முறைகேடு மற்றும் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி திருச்சி, திருமயம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெல் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், விதிகளின்படி அந்த டெண்டரை இரண்டாம் நிலையில் உள்ள பெல் நிறுவனத்திற்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும், முதல்வர் தலைமையிலான ஆய்வு கூட்டத்தில் டெண்டரை பிஜிஆர் நிறுவனத்திற்கே டெண்டரை ஒதுக்கியது சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுவாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் டெண்டர் எடுத்த பணிகளை அமல்படுத்துவதில் 3 ஆண்டுகள் காலதாமதம் ஆகியுள்ளதாகவும், அடிப்படை பணிகளை கூட பி.ஜி.ஆர். எனர்ஜி தொடங்கவில்லை என கூறி, சிபிஐ விசாரணை கேட்கும் கோரிக்கை, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதன்மீது அரசு தரப்பு விளக்கம் அளிப்பதற்காக வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

You may also like...