அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட நால்வருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக 1997ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி, மற்றும் கிருஷ்ணமூர்த்தி, பாரதி ஆகியோர் என 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து பாரதி, செல்வகணபதி, கிருஷ்ணமூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகியோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டிலேயே மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது. புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

சிபிஐ தரப்பில், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகாடுகளுக்கு மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது, அதிலும் தலா 23 லட்ச ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 17 லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்ற தண்டனையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

இந்த மேல்முறையீடு வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட நால்வருக்கும் சிபிஐ நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...