சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என நீதிபதிகள் கேள்வி cj bench

சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பான வழக்கில், சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமான தீர்ப்பு நகல்களை தாக்கல் செய்ய அதிமுக கொறடா வேலுமணி தரப்புக்கு அவகாசம் வழங்கியுள்ளது.

சட்டமன்ற நிகழ்வுக்ளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சியின் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிமுக கொறடா வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சட்டமன்ற நிகழ்வுகள் பகுதி பகுதியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் பேச்சுக்கள் முழுமையாக ஒளிபரப்பு செய்யாமல் பாரபட்சம் காட்டுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் நிலையில், டிஜிட்டல் யுகத்தில் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வது சாத்தியமற்றது எனவும், சில நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் விளக்கமளித்தார்.

அதிமுக கொறடா வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நாடு முழுவதும் சட்டமன்றங்களின் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய தேசிய இ விதான் என்ற திட்டம் துவங்கப்பட்டு, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுசம்பந்தமாக தீர்ப்பு நகல்களை தாக்கல் செய்ய வேலுமணி தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை நீதிபதிகள், நவம்பர் 10 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...