சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென

சென்னை மாநகராட்சி வார்டுகளை மண்டலவாரியாக ஒதுக்காமல், ஒட்டுமொத்தமாக பிரித்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக ஒதுக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து, கூடுதல் வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்குவதால் அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .

இந்நிலையில் வழக்கறிஞர் பார்த்திபன் என்பவர் தொடர்ந்துள்ள மனுவில் மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரிக்கை வைத்திருந்தார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்தி முடிப்பதற்கான அவசியம் இருப்பதாகவும், வழக்கு குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வார கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்ததுடன், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like...