நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சி.குமரப்பன். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு 351 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு 351 உதவி பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010 – 11ம் ஆண்டுகளில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்காமல், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்றும், காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டும், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்குகள், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 3 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன், 425 காலியிடங்களுடன் எப்படி செயல்படுகிறது என விளக்கமளிக்க பல்கலைகழக பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அண்ணா பல்கலைகழக பதிவாளர் தரப்பில், தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதில் உள்ள சிக்கல்கள், நேரடி நியமனம் ஏன் மேற்கொள்ளப்படவில்லை, காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது ஏன் என விளக்கம் அளித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழும விதிகளின்படி, பல்கலைகழகத்தின் 16 உறுப்பு கல்லூரிகளிலும் 835 உதவி பேராசிரியர்கள், 224 இணை பேராசியர்கள், 99 பேராசிரியர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 484 உதவி பேராசியர்கள், 15 இணை பேராசிரியர்கள், 5 பேராசியர்கள் மட்டுமே உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அண்ணா பல்கலைகழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 351 இடங்களை நேரடி தேர்வு முலம் நிரப்ப தயாராக இருப்பதாகவும், அப்போது தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த 351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்ய பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை மறுதினத்திற்கு (அக்டோபர் 12) தள்ளிவைத்துள்ளனர்.

You may also like...