நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார், P.B.பாலாஜி, நிலத்திற்கு உரிமை உள்ளது என்பதை நிருபிக்க ஜமீன்தார்கள் வழங்கிய பட்டாக்களையோ, வரி செலுத்தியதற்கான ஆவணங்களையோ தாக்கல் செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மேகமலை வனப்பகுதியில் 7 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தனி நபர்களுக்கு பட்டா வழங்க மறுத்த நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தற்போதைய தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் உள்ள மேகமலை கிராமத்தில் உள்ள 56 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனப்பகுதியாக அறிவித்து கடந்த 1951ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதன்பின்னர் இந்த பகுதியை ஸ்ரீவில்லிப்புத்தூர் – மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவித்த சர்வே எண்களில் தங்கள் அனுபவத்தில் உள்ள 7 ஆயிரத்து 106 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க கோரி வீரய்யா செட்டியார் மற்றும் காமாட்சி செட்டியார் ஆகியோர் அரசிடம் விண்ணப்பத்திருந்தனர்.

பல கட்டங்களில் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய வாரிசுகள் போஜராஜன் உள்ளிட்ட 20 பேர் 2005ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி 2015ல் பிறப்பித்த தீர்ப்பில் பட்டா வழங்க மறுத்த நில நிர்வாக ஆணையரின் உத்தரவு ரத்து செய்தும், பட்டா வழங்கவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தேனி மாவட்ட வன அதிகாரி நில நிர்வாக ஆணையர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார், P.B.பாலாஜி, நிலத்திற்கு உரிமை உள்ளது என்பதை நிருபிக்க ஜமீன்தார்கள் வழங்கிய பட்டாக்களையோ, வரி செலுத்தியதற்கான ஆவணங்களையோ தாக்கல் செய்யவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

1963லிருந்து தற்போது வரை மனுதாரர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் அவர்களுக்கு எதிராகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை எதிர்த்து வழக்கும் தொடரவில்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

திண்டுக்கல் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், பட்டா வழங்க மறுத்த நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதிசெய்தும் தீர்ப்பளித்தனர்.

You may also like...