நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள், டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்; இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகள் அறிவிப்பதை தள்ளிவைக்கலாம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைந்துள்ள பார்களில் காலி பாட்டில்களை சேகரிக்கவும், தின்பண்டங்கள் விற்கவும் உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் நிர்வாகம், அக்டோபர் 6ம் தேதி டெண்டர் கோரியது.

நடப்பாண்டு நவம்பர் முதல் தேதியில் இருந்து, 2025 அக்டோபர் வரையிலான காலகட்டத்துக்கான இந்த டெண்டரில், பார்கள் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளர்களிடம் இருந்து தடையில்லா சான்று மற்றும் வாடகை ஒப்பந்தம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டெண்டர் இறுதி செய்யப்பட்ட ஏழு நாட்களுக்குள் தடையில்லா சான்று வழங்காவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அடுத்து அதிக தொகைக்கு உரிமம் கோரியவரிடம், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்று கேட்கப்படும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் கொடுக்கும் வகையில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், நில உரிமையாளர்களின் விவரங்களை வழங்காமல், தடையில்லா சான்றும், வாடகை ஒப்பந்தமும் சமர்ப்பிக்க கூறப்பட்டுள்ளது பாரபட்சமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 27ம் தேதி டெண்டர் திறக்கப்பட உள்ளதால், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும், டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள், டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்; இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டர் முடிவுகள் அறிவிப்பதை தள்ளிவைக்கலாம் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை மனுதாரர்கள் தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, மனுதாரர்கள் டெண்டரில் பங்கேற்க அனுமதித்த நீதிபதி, டெண்டர் முடிவுகளை அறிவிக்க கூடாது எனவும், அதனை தள்ளிவைக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

You may also like...