ரத்து சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க பத்திரப்பதிவுத் துறை தலைவர் தலைமையில் மதிப்பீட்டுக் குழு செயல்பட்டுவருகிறது.

2023-24ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் உரையில், சொத்துக்களின் விலை அதிகரித்துள்ளதால் வழிகாட்டி மதிப்பீட்டை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி வரை அமலில்.இருந்த வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் மதிப்பீடு நிர்ணயிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, 2017ல் அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், புதிய மதிப்பீட்டை நிர்ணயித்து 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென 2023 மார்ச் 30ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில் சட்டவிதிகளின்படி எந்த கலந்தாலோசனையும் நடத்தாமல், பொதுமக்கள் கருத்துகள் கேட்காமல் வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இது தற்காலிக ஏற்பாடாக தெரியவில்லை என்றும், 50 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி P.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில், வழிகாட்டி மதிப்பீட்டை திருத்தி அமைக்க அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகள் பெற்று, அவற்றை ஆய்வுசெய்து, பொதுமக்கள் கருத்துகளை பெற்று அதன்பிறகே வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை, இயற்கை நீதியை மீறும் வகையில் உள்ளது என கூறி, சுற்றறிக்கையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.

மேலும் விதிகளை பின்பற்றி வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதுவரை 2017 மதிப்பீட்டை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...