வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என, அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என, அமைச்சர் பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர் கல்வித் துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, இருவரையும் விடுவித்து 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2016 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உள்பட லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட புலன் விசாரணையில் சேகரித்த ஆதாரங்களைத் தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு வழக்கறிஞர் பாபு முத்துமீரான், 39 சாட்சிகளை விசாரித்ததாகக் குறிப்பிட்டார்.

பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை, பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பொன்முடியின் மனைவிக்கு சொந்தமாக 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளதாகவும், தனியாக வர்த்தகம் செய்ததாகவும், இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என வாதிட்டார்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.
வழக்கில் வாதங்கள் முடிவடையாததால் வழக்கின் விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன், நவம்பர் 23 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

You may also like...