You may also like...
-
-
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் உள்ளதாக, அந்த பள்ளியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், சிறப்பு ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி, குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து குழந்தை சார்பில் அதன் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 1870ல் இருந்து 1960ம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த புனிதர், இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய புனிதர்களின் கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையின் பிந்தைய நாட்களில் குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க அந்த பள்ளி முன் வந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை அப்பள்ளி தாமாக முன் வந்து முதலிலேயே செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அரசுத்தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு அதில் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மிஷனரி பள்ளியில் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது தனக்கு திருப்தியளிக்கும் எனத் தெரிவித்து, இதுசம்பந்தமாக தாயே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.
by Sekar Reporter · Published February 24, 2023
-