Navj அதிரடி உத்தரவு

அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததன் மூலம் பலன்பெறும் லஞ்ச ஒழிப்புத் துறை, உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை பாரபட்சமானது எனக் கூறுவது வினோதமாகவும், மர்மமாகவும் உள்ளது என, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக மறுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397 வது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றஙகளில் இருந்து ஆவணங்களைப் பெற்று அவற்றின் உத்தரவுகளையும், தீர்ப்புகளையும் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்ய அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவகாசம் உள்ள நிலையில், உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், லஞ்ச ஒழிப்புத் துறையின் மேல் முறையீடு செய்யும் உரிமை பாதிக்கப்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அப்படி மேல் முறையீடு செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது ஆதரவாகவே அமையும் எனவும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தால் அது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பயனாகவே இருக்கும் என்பதால், உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை பாரபட்சமானது எனக் கூற முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது பாரபட்சமானது என லஞ்ச ஒழிப்புத் துறை கூறுவது வினோதமாகவும், மர்மமாகவும் உள்ளது எனவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, வேலூர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யவில்லை எனவும், இரு தரப்பினருக்கும் விளக்கம் அளிக்கவே உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து வருவதால், குறிப்பிட்ட நீதிபதி, சிலருக்கு எதிராக வேட்டையில் இறங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது தனிப்பட்ட நீதிபதி அல்ல எனவும், உயர் நீதிமன்றம் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் இரு தரப்பினரும் வாதங்களை முன்வைப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும், அக்டோபர் மாதம் முதல் நீதிபதிகளின் ரோஸ்டர் எனப்படும் விசாரிக்க வேண்டிய வழக்குகள் ஒதுக்கீட்டில் மாற்றம் வரலாம் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார்.

You may also like...