Sethu Sir Dinamalar: *வா என்றால் வந்து நிற்கட்டும் பூங்காற்று!* ராஜவல்லிபுரம் சேது * பணி முடிந்து, அன்றிரவு 10.30 மணி தாண்டி வீடு வந்து சேர்ந்தேன்.

[5/15, 00:36] Sethu Sir Dinamalar: *வா என்றால் வந்து நிற்கட்டும் பூங்காற்று!*
ராஜவல்லிபுரம் சேது
*
பணி முடிந்து, அன்றிரவு 10.30 மணி தாண்டி வீடு வந்து சேர்ந்தேன். அபார்ட்மென்ட்டில், காவல்பணி புரியும் முதியவர், தூக்கம் வராமல், தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்.
வழக்கமாக, பார்க்கிங்பகுதியில், அவர் இரவு 10 மணிக்குள் தூங்கியிருப்பார். அதன்பின் அவரது மனைவிதான், இரவில் வீடு திரும்புபவர்களுக்கு கதவு திறந்து, மூடுவார்.

இரவு 10 மணிக்கு முன்பு, நான் இல்லம் வரும்நாட்களில், ‘‘வணக்கம்ப்பா…’’ என்பார். ‘‘சாப்பிட்டீங்களா…’’ என்று கேட்டு வைப்பேன். நான் வாகனம் பார்க் செய்வதற்குள் ‘‘லிப்ட்’’ தரைத்தளம் வர வைப்பார்.

எதற்கு இதெல்லாம் என்று அடிக்கடி சொல்லி வைப்பேன்.
கொஞ்சம்கூட, சலிப்புதட்டாத, சங்கடம் நேராத, அன்றாட இரவு காட்சிகள், வசனங்கள் இவை.

நம் அருகில் இருக்கும் உறவுகள், தொப்புள் கொடி உறவாக இருக்க வேண்டுமென்பதில்லை. அன்பால் இணையும் எல்லா இதயத்துடனும், ஏதோ ஒரு பந்தம். இனம் புரியாத சந்தோஷம் பிணைந்து கொண்டே இருக்கிறது.

திருவண்ணாமலை பக்கம் நிலம் வைத்திருக்கிறார். எலக்ட்ரிஷியன். பிளம்பர் பணி செய்தவர். வயது முதிர்ந்த காலத்தில், கணவன் – மனைவியாக எங்கள் அபார்ட்மென்ட்டில் பணிபுரிகிறார்கள். பிள்ளைகள் அவ்வப்போது வந்து பெற்றோரை பார்த்து செல்வார்கள்.

‘‘அவருக்கு சிக்கன் பிரியாணி, செல்போன்ல ஆர்டர் பண்ணி கொடுப்பா… நான் பணம் கொடுத்துடுறேன்…’’ என்று அவர் மனைவி அடிக்கடி சொல்வார்.

பண்டிகை தினங்களில், வீட்டில் தயாராகும் பதார்த்தங்கள் / உணவுகளை ‘‘சூடு ஆறுவதற்குள், வாட்ச்மேன் தாத்தாவுக்கு கொண்டு போய் கொடுங்க…’’ என்று அம்மா சொல்வாள். கிட்டதட்ட, சாமிக்கு படையலிடுவதுபோல, சாமிக்கு எடுத்து வைக்கும்போதே, தாத்தாவிற்கும் கொண்டுபோய் கொடுப்போம்.
ஆனால், இரண்டு மணி நேரம் கழித்து செல்லும்போது பார்த்தால், சாப்பிடாமல் அப்படியே வைத்திருப்பார்.
‘‘நம்ம எங்கப்பா தனியா சாப்பிட்டோம். அவ, வேலைக்கு போயிருக்கா. வந்ததும் சாப்பிட்டுக்கிறேன்…’’ என்பார்.
*
‘‘பொன்னியின் செல்வன் படத்திற்கு போகலலையா. சொல்லுங்க, டிக்கெட் போட்டு தருகிறேன்’’ என்பேன்.

‘‘நமக்கு அதுக்கு எங்கப்பா நேரம் இருக்கு. காலையில் நாலு வீடு. மாலையில நாலு வீடு வேலை முடித்து வந்தா. எப்படா படுக்கலாம்னு இருக்கு…’’ என்பார்.

‘‘ஒரு நாள் லீவு போட்டுட்டு படத்துக்கு போயிட்டு வாங்க…’’

‘‘தூங்குறதுக்கு முன்னாடி, செல்போன்ல ரெண்டு சீரியல் பாக்குறேன்ல அதான்…’’
*
வெக்கை சூழ்ந்த அந்த இரவில், தூக்கம் வராமல், அருகில், துளிகூட கிளைகள் அசையாமல் நின்றிருந்த, வே(வெ)ப்ப மரத்தை பார்த்துக்கொண்டிருந்தார், முதியவர்.

‘‘என்ன இன்னும் தூங்கல…’’ என்று நான் கேட்க நினைப்பதற்குள், அவரின் மனைவி முந்திக்கொண்டார்.

‘‘ஒரே வெயிலுப்பா. அனல் காத்தா அடிக்குது. அதான் ஐயாகூட இன்னும் தூங்காம இருக்கார் பாருங்க…’’
முதியவர் அருகில், தரையில் ஒரு சிறு மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. எதுவும் பேசவில்லை. கையை மற்றும் உயர்த்தினார்.
‘‘மோக்கா புயல் உருவானதால, காற்றில் ஈரப்பதம் இல்லை. புயல் கடந்து சில தினங்களுக்குப்பிறகுதான். கொஞ்சம் வெக்கை தணியும்…’’ என்று சொன்னபடி, லிப்டுக்குள் நுழைந்து கொண்டேன்.
அந்த இரவில், அவர் நிம்மதியாக தூங்க வேண்டும். அவர் மனைவி. சில நாட்களாக அவர் தந்தையை பார்க்க வந்திருக்கும் மகள், அவருடன் இருக்கும் சிறு குழந்தை ஆகியோரும் தூங்க வேண்டுமே. இத்தனை பேருக்கும் அந்த ஒரு மின்விசிறி போதுமானதாக இருக்குமா?…

மூன்றாவது தளத்திற்கு மின்தூக்கி வருவதற்குள், என் மனதிற்குள், விதவிதமான எண்ணங்கள் அலை மோதின.

கதவு திறந்து, மனைவி எதிர்பட்டதும், வீட்டிற்குள் நுழைந்தும், நுழையாமலும், ‘‘வாட்ச்மேன் தாத்தா இன்னும் தூங்காம இருக்காரு. அவங்க வொய்ப், வெக்கயைா இருக்குனு பேசிகிட்டாங்க. நம்ம வீட்ல இருக்கிற, ‘‘ஸ்டாண்ட் ஃபேனை ஒரு மாசத்துக்கு கொடுத்துருவோமா. வெயில் காலம் முடிந்ததும் தரட்டும்…’’
சபரி, கண்கள் பளிச்சிட்டது. ‘‘ஆமாங்க. அவங்க பயன்படுத்திக்கொள்ளட்டும். ரெண்டு, மூணு மாசம் கழித்துகூட கொடுக்கட்டும். அவசரமில்லை. அவருக்கு போன் போட்டு வந்து லிப்ட்ல எடுத்துட்டு போக சொல்லுங்க…’’
மொபைலில் முதியவரை தொடர்பு கொண்டேன். ‘‘இந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறது…’’ குரல் ஒலித்தது.
‘‘ரீசார்ஜ் பண்ணலையா. அணைத்து வைத்திருக்கிறாரா தெரியவில்லையே’’
‘‘நானே கீழே போய் சொல்லிட்டு வர்றேன்…’’
-மின்தூக்கியில், சபரி தரைத்தளம் சென்றிருந்தார்.
சில நிமிடங்களில், மின்தூக்கியில் இருந்து, சபரியும், முதியவரின் மனைவியும் வெளிப்பட்டார்கள்.

‘‘அம்மா, ஃபேன் எடுத்துக்க சொன்னாங்க. வேணாய்யா…’’
‘‘ஏம்மா, சங்கடப்படுறீங்க. இங்க சும்மாதான், இருக்கு. யாராவது, கெஸ்ட் வந்தாதான் எங்களுக்கு பயன்படும். நீங்க தாராளமா தயங்காம எடுத்துக்கங்க…’’
‘‘இல்லீங்கய்யா. ஃபேனை வாங்கி கீழே வைத்தால், காணாம போயிடும்னு ஐயா பயப்படுறார்…’’
‘‘அப்படி போனா போகட்டும். நீங்க எடுத்துக்கங்க. நான் கொண்டு வந்து கீழே தரவா?’’
‘‘பாதையில வச்சா, கார், கீர் போகும் எடஞ்சலா இருக்கும்…’’
‘‘ரொம்ப யோசிக்காதீங்க. எடுத்துட்டு போங்க. அப்புறம் எப்படி தூங்குவீங்க…’’
‘‘அய, இல்லங்க. அந்த சின்ன ஃபேனே போதும். அவருக்குத்தான் ஃபேன் வேணும். நமக்கு பழகிடுச்சு. அப்படியே தூங்கிடுவேன். பாருங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில, வேப்ப மர காத்து குபுகுபுன்னு அடிக்கும். அதுபோதுங்க…’’
-நெகிழ்ந்தார். மறுத்தார்.
‘‘அம்மா வந்து சொன்னாங்களா. ரொம்ப சந்தோஷம். ரொம்ப நன்றிங்க. ஐயா சொல்ல சொன்னார். அதான் நானே வந்தேன்…’’
அந்த பெண் சென்றுவிட்டிருந்தார்.
பொதுவாகவே, எனக்கு இரண்டு மணி தாண்டிதான் தூக்கம் வரும். அன்றைய தினம் அதிகாலை 3 மணி ஆகி இருந்தது. உறக்கம் வரவில்லை.
எங்கள் இல்லத்தில், மகன் பெரிய கணினி பயன்படுத்தும், ஒரு அறையில் மட்டுமே குளிர்சாதன வசதி இருக்கிறது. சில நாட்கள் அதற்குள்ளும், சில நாட்கள் ஹாலிலும் உறங்குவோம். அன்று ஹாலில் படுத்திருந்தேன்.

பலசமயங்களில், எளியவர்கள்தான், சிந்தையில், செயலில் உயர்ந்தவர்களாக தெரிகிறார்கள்.
நம் வீட்டில் இருக்கும் ஃபேனை நாம் வழங்க தயாராக இருந்தும், அவர்கள் மறுத்துவிட்டார்களே.
அறைக்குள் நிலவிய புழுக்கம், மனதிற்குள்ளும் பரவியது.
எழுந்து சென்று, பால்கனி கதவுகளை திறந்து நின்றேன். காம்பவுண்ட் சுவர் ஒட்டிய அந்த பிரமாண்ட வேப்பமரம், அதை சுற்றிய மரங்கள் அசைவின்றி நின்றிருந்தன.
மீண்டும் கதவை மூடினேன்.
நாள் தவறாமல், சுவாமி படங்களுடன், ‘‘காலை வணக்கம்’’ வாட்ஸ்அப்பில், அனுப்புபவர்களின் குறுஞ்செய்திகள், அந்த அதிகாலையிலும் அலைபேசிக்குள் மின்னின. அதையெல்லாம் அன்றுதான் முழுமையாக பார்த்தேன்.
சற்றுநேரத்தில், ஜன்னலோரத்தில் மரக்கிளைகளின் சலசலப்பு. எக்ஸ்சாஸ்டர் விசிறி வழியே விர்ர்ர்….விர்ர்ர்… என்ற சத்தம்.
காற்றின் பயணம் தொடங்கிவிட்டது புரிந்துவிட்டது.
மறுபடியும் பால்கனி கதவு திறந்தேன். சிலீர் என மெல்லிய குளிர்காற்று சில்லிட்டது. என் வீட்டை சுற்றி இருந்த மரங்கள், கிளைகளை அசைத்து சாமரம்வீசி, ஏழைகளை தூங்க வைக்க தொடங்கி இருந்தன.
அந்த எளிய பெண்ணின் குரல், வேப்ப மரத்தின் செவிகளை எட்டியிருக்கிறது.
சில நிமிடங்கள் பால்கனியில் நின்றிருந்தேன். அறைக்குள் ஊடுருவிய காற்று, புழுக்கத்தை போக்கி இருந்தது.

அந்த முதியவரும், அவர் மனைவியும், இந்த காற்றுக்கு காத்திருக்காமல், எப்போதோ தூங்கி இருப்பார்கள். இருந்தபோதும், அந்த மெல்லிய பூங்காற்று அவர்களை தாலாட்டும் என்பதை நினைத்தபோது, மனம் லேசாகி இருந்தது.
அலைபேசியை அணைத்துவிட்டு உறங்க முயற்சித்தேன்.
[5/15, 06:09] sekarreporter1: Super sir

You may also like...