smsj கிரானைட் வழக்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது

கிரானைட் முறைகேடு தொடர்பாக 180 பேருக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைந்துமுடிக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, இதுசம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்துக்கு 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

அவர் தாக்கல் செய்த அறிக்கையில், அரசு புறம்போக்கு நிலத்திலிருந்து 16 ஆயிரத்து 338 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சுரங்கத் துறை துணை இயக்குனர் மற்றும் 3 உதவி இயக்குனர்கள் அடங்கிய குழு அளித்த அறிக்கையில், மதுரை வடக்கு தாலுகாவில் உள்ள நவினிபட்டி, கீழ வளவு, திருவத்தூர் உள்ளிட்ட இடங்களில், 124 அரசு புறம்போக்கு நிலங்களில், 25 ஆயிரத்து 321 பிளாக் கிரானைட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்த கிரானைட்களை ஏலம் விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை எதிர்த்து பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், விஜயா கிரானைட்ஸ், முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிறுவனங்கள் தரப்பில், கிரானைட் முறைகேடு வழக்கில் தங்கள் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் கிரானைட்கள் மீதான உரிமையை கோர முடியவில்லை என தெரிவித்தனர்.

தோண்டி எடுக்கப்பட்ட குழிகளை நிரப்புவதற்காக விற்க முடியாத கிரானைட் கற்கள், கழிவுகள், நிராகரிக்கப்பட்ட கிரானைட்கள் ஆகியவை தேவைப்படும் என்பதால், அவை ஏலமிடப்படும் என்கிற அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கிரானைட் நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய கிரானைட் கற்கள் மதிப்பிழந்து வருவதால் அவற்றை ஏலமிட முடிவு செய்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்படியே வைத்திருந்தால் அரசுக்குதான் இழப்பு ஏற்படும் என்பதால், அவற்றை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை சம்பந்தப்பட்ட வழக்கின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஏற்கனவே 180 பேருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ளதை குறிப்பிட்டு, கனிம வள சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிடுவது அல்லது விற்பது தொடர்பாக அந்த விசாரணை நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள விற்கமுடியாத கிரானைட், கழிவுகள், நிராகரிக்கப்பட்ட கிரானைட் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 மாதத்தில் முடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்துவைத்துள்ளார்.

மேலும், கிரானைட் முறைகேடு தொடர்பாக 180 பேருக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையையும் விரைந்துமுடிக்க வேண்டுமெனவும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...