smsj நீதிபதி, தமிழக அரசின் சட்டத் திருத்தத்தில் முன் தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக தெளிவற்ற நிலை

மோசடியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மோசடியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் மேற்கொள்ளப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக பத்திரப்பதிவு சட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது.

இந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் 2004ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது தொடர்பாக தென் சென்னை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த நோட்டீசை எதிர்த்து காஸ்நவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்வது குறித்த விசாரணையை அனுமதித்தால், அது நில உரிமையாளர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, தமிழக அரசின் சட்டத் திருத்தத்தில் முன் தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக தெளிவற்ற நிலை உள்ளதாகவும், முன் தேதியிட்டு அமல்படுத்த அனுமதித்தால் லட்சக்கணக்கான பத்திரப்பதிவுகள் குறித்து விசாரணை நடத்தக் கோரிக்கைகள் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத்திருத்தத்தில் முன் தேதியிட்டு அமல்படுத்துவது தொடர்பாக எதுவும் குறிப்பிடாததால், இதை முன் தேதியிட்டு அமல்படுத்தமுடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட பத்திரப்பதிவுகள் குறித்து உரிமையியல் நீதிமன்றங்களில் மட்டுமே நிவாரணம் பெற முடியும் எனவும் தெளிவுபடுத்திய நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரர் 2004 ம் ஆண்டு மேற்கொண்ட பத்திரப் பதிவு குறித்து விசாரிக்க மாவட்ட பதிவாளர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...