கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர், தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மூன்றாவது நபருக்கு வழங்கியது மட்டுமல்லாமல், கிரயமும் செய்திருக்கிறார் எனக் கூறி, அதுசம்பந்தமான ஆவணங்களை தாக்கல் செய்தார்.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், கோவில் நிலத்தை மூன்றாம் நபருக்கு கொடுக்க என்ன உரிமை உள்ளது என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர்.

மேலும், கோவில்களை பாதுகாப்பதாக கூறி வழக்கு தொடரும் நிலையில், கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட அறநிலையத் துறை வழக்கறிஞர், ஆக்கிரமிப்பை அகற்ற அறநிலையத் துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் மனுதாரர் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் வெங்கட்ராமன், தனது சகோதரர் தான் கோவில் நிலத்தை பெற்றதாகவும், கோவில் நிலத்தை திருப்பி கொடுக்க வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது எனக் கூறி, குறிப்பிட்ட அந்த நிலம் தற்போது யார் வசம் உள்ளது என்பதை கண்டறிந்து, உடனடியாக அதை மீட்க நடவடிக்கை எடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...