நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என கூறினார்.

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரிய மன்சூர் அலிகான் மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம்
உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை என கூறினார்.

மேலும், இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செயப்பட்டுள்ளதாக கூறினார்.

காவல்துறை சார்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

இதனையடுத்து, மனு மீதான உத்தரவை நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

You may also like...