மதுரையில் போலி போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்ட விவகாரத்தில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி வகித்த காலத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும், இவை டேவிட்சன் மனைவி நடத்தும் டிராவல் ஏஜன்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுசம்பந்தமான விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்க க்யூ பிராஞ்ச் போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையை கண்காணிக்கும்படி, எஸ்.பி.சி.ஐ.டி – ஐ.ஜி.க்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வாராகி என்பவர் தமிழக அரசுக்கு கடந்த மே மாதம் மனு அனுப்பியிருந்தார்.

இந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இதுசம்பந்தமாக 41 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு காவல் உதவி ஆணையர் உள்பட ஐந்து காவல் துறை அதிகாரிகள் அடங்குவர். மொத்தமாக, 21 அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், ஐ.பி.எஸ். அதிகாரிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்தார்.

மனுதாரர் வாராகி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயேந்திரன், ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி இணை அலுவலகமே நடத்தியுள்ளார். இதுசம்பந்தமாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்கப்பட்டது. இதுவரை எந்த பதிலும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஐந்து போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கீழ் பணியாற்றுவோர் செய்யும் தவறுக்காக உயர் அதிகாரி எப்படி பொறுப்பாவார்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தகவல் உரிமை சட்டத்தில் தகவல் தரவில்லை என்றால் மேல் முறையீடு செய்யலாம். எந்த ஆதாரங்களும் இல்லாமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி, விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...