வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சுங்கத்துறை முன்னாள் அதிகாரிக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில், 2009ம் ஆண்டு சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பயணியர், முகவர்களிடம் இருந்து, சுங்கத்துறை அதிகாரிகள் பலர் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, சுங்கத்துறை கண்காணிப்பாளராக பணிபுரிந்த பல்லப் சின்ஹா மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், அவரது வீட்டில் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்கள், ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், 2008 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், பல்லப் சின்ஹா, அவரது மனைவி ரீனா சின்ஹா ஆகியோர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ரீனா சின்ஹா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பல்லப் சின்ஹா மீதான வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான், பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக, 10 லட்சத்து 59 ஆயிரத்து 56 ரூபாய், அதாவது 201.38 சதவீதம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

You may also like...