1k days delay cost 500 k for officer by judge c saravanan

இடைநிலை ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென்ற உத்தரவை, மறு ஆய்வு செய்ய வேண்டுமென 6 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக் கல்வி துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், ஆயக்காரம்புலம் கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 2015-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வெண்ணிலாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக 8 வாரத்துக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன்பின்னரும் அவர் ஓப்புதல் அளிக்காததால், மாவட்ட கல்வி அலுவலருக்கு எதிராக மூன்று முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன், 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று 2 ஆயிரத்து 148 நாட்கள் காலதாமதத்துடன் கல்வித்துறை மனுத் தாக்கல் செய்திருப்பதை ஏற்க முடியாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். கல்வித்துறை செயலாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், ஒரு வாரத்தில் அதை சட்டப்பணி ஆணைக்குழுவிடம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

அதற்கான ரசீதை சமர்ப்பித்த பிறகே, இந்த உத்தரவு நகலை தமிழக அரசுக்கு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

You may also like...