Judge R sureskumar judge kumarappa penson case order ஒய்வூதியம. பெறாமல் ஏழை பெண் மரணம் வேதனையான தீர்ப்பு சட்ட திருத்தம் வேண்டும்

வருவாய் துறையில் தலையாரியாக பணியாற்றி, 36 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்காமல், மேல் முறையீடு செய்த அதிகாரிகளின் செயல் மனிதத்தன்மையற்றது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை மாம்பலம் – கிண்டி தாலுகா தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றிய T.S.பெருமாள் என்பவர், கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி பணியில் இருந்த போது மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவரது மனைவி T.V.S. ஜெயா குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி சைதாப்பேட்டை சார் ஆட்சியர் கடந்த 1987 டிசம்பர் 8ம் தேதியும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அனுப்பும்படி மாவட்ட ஆட்சியர் கடந்த 1989 ஏப்ரல் 3ம் தேதியும் தாசில்தாரருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

இருப்பினும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் கடந்த 2004ம் ஆண்டு ஜெயா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 13 ஆண்டுகள் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயாவுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள், சைதாப்பேட்டை தாசில்தாரர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல்முறையீட்டு வழக்கு, நிலுவையில் இருந்த போது வழக்கு தொடர்ந்த ஜெயா மரணம் அடைந்ததார். இதையடுத்து அவரது 60 வயது மகன் நதீஷ் பாபு எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, தலையாரி பெருமாள் இறந்து 36 ஆண்டுகள் கடந்தும்; உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, 13 ஆண்டுகளுக்கு பிறகும், ஓய்வூதிய பலன்களை பெறாமலேயே ஏழை பெண் மரணமடைந்து விட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற நிலை எவருக்கும் வரக்கூடாது எனவும் இதற்கு கடமை செய்யத் தவறிய அதிகாரிகளே காரணம் எனவும் கண்டித்துள்ளது.

சொற்ப தொகையே குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டிய நிலையில், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்த அரசின் செயல் மனிதத்தன்மையற்றது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதற்கு எந்த அதிகாரி காரணம் என பொறுப்பாக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு, குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும் எனவும், ஆறு மாதங்களில் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்குவது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த மேல் முறையீட்டு வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற போதும், அதை எதிர்த்து மேல் முறையீடு செல்லக் கூடும், குடும்ப ஓய்வூதியம் கிடைக்க தாமதமாகும் என்பதால் அதை தவிர்ப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததுடன், எட்டு வாரங்களில் நதீஷ்பாபுக்கு குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட்டனர்.

You may also like...