Admk case நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக்

அதிமுக பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினரின் மனுக்களில் இறுதி விசாரணை நடத்துவதா அல்லது இடைக்கால நிவாரணம் வழங்குவதா என்பது குறித்து வரும் திங்கட்கிழமை முடிவெடுப்பதாக சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி கே. குமரேஷ் பாபு மார்ச் 28ல் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த மேல்முறையீடு வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்கு எடுத்து, வாதங்களை கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கும் சம்மதமா என விளக்கம் கேட்டனர்.

ஒபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, எங்கள் குற்ராச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாக கூறிய தனி நீதிபதி, இடைக்கால உத்தரவை பிறப்பிக்கவில்லை என்பதால், இடைக்கால நிவாரணம் கிடக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும்,
கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கைகள் அனைத்தும் விதிகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டார். கட்சியிலிருந்து நீக்கிய நடைமுறை தவறு என்றால், அதன்பின் நடந்த மற்ற நடைமுறைகள் மட்டும் எப்படி சரியாகும் என்றும், தடை விதிக்காதது தவறு என்றும் தெரிவித்தார். இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டால் பொது செயலாளர் தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும் என்றும் வாதிட்டார்.

வைத்திலிங்கம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மணிசங்கர், மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல்சலீம், ஜெ.சி.டி.பிரபாகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.

பின்னர் அதிமுக தரப்பில், கட்சியில் தற்போது ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை என்றும், பொது செயலாளர் பதவி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அந்த பதவிக்கு உரிய அறிவிப்பின் மூலம் தேர்தல் நடத்தப்பட்டு பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி மற்றும் அதன் தொண்டர்களை தயார்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே பொது செயலாளர் தேர்தல் நடத்தபட்டதாக தெரிவிக்கப்பட்டது. பலமுறை ஆளும்கட்சியாகவும், தற்போது எதிர்க்கட்சியாகவும் உள்ள ஒரு கட்சி தேர்தலை திறம்பட சந்திக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் ஒபிஎஸ் இருக்கையை மாற்றக் கோரி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு வேட்பாளர் மனுத்தாக்கல் செய்ய குறைந்தபட்சம் 10 மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஒபிஎஸ் எப்படி போட்டியிட முடியும் என தெரிவித்தார். இடைக்கால நிவாரணம் ஏதும் அளிக்க வேண்டியது இல்லை என்றும், வழக்கை இறுதி விசாரணைக்கு பட்டியலிடலாம் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது ஒபிஎஸ் வழக்கறிஞர் ராமன் குறுக்கிட்டு, மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இல்லை என எப்படி கூறுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

வைத்திலிங்கம் தரப்பில் இரு பதவிகள் காலி என தேர்தல் ஆணையத்திற்கு சொன்ன நிலையில், அதற்கு பிறகு நடைபெற்ற பொதுக்குழுவில் அந்த பதவிகளை நிரப்பி இருக்க வேண்டும் அல்லது இடைக்கால ஒருங்கிணைப்பாளர், இடைக்கால இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை நியமித்திருக்க வேண்டும் என குற்றம்சாட்டினார். ஒரே ஒருவருக்காக கட்சியின் விதிகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது என்றும், புறந்தள்ளப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

பின்னர் அனைத்து தரப்பினரும் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்ததை அடுத்து, வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் அனைத்து தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு (ஏப்ரல் 3) தள்ளிவைத்தனர்.

அன்றைய தினம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டுமா அல்லது இறுதி விசாரணை நடத்துவதா என முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

You may also like...